செய்திகள்

ஆய்வுக்கு சென்ற இடத்தில், அரசு அலுவலர்கள் அடாவடி!! அதிர்ச்சியில் மலைவாழ் மக்கள்

ஆய்வுக்கு சென்ற இடத்தில், அரசு அலுவலர்கள் அடாவடி!!
அதிர்ச்சியில் மலைவாழ் மக்கள்….

பொள்ளாச்சி அருகே சப்-கலெக்டர் உடன் ஆய்வுக்கு சென்ற அலுவலர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் மலைவாழ் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரக ங்களில் அடர் வனப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

வனத்தைப் பாதுகாப்பதோடு வனப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட நெடும் போராட்டங்களுக்கு பிறகு வன உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் அந்த சட்டம் இன்னும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மீண்டும் கற்காலத்திற்கு செல்லும் அவல நிலையில்தான் இன்னும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக அடிக்கடி பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட நவமலை வனப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஓலைக் குடிசைகளில் மட்டுமே வசித்து வரும் இவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை செய்து கொடுக்கப்படவில்லை.

பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சில கூரை வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதனை அரசு அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை.

இதுதொடர்பாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். இது பொதுமக்களிடையே வேகமாக பரவியதை அடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நவமலை பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.

வழக்கம்போல் அங்கு கண்துடைப்புக்காக ஓரிரு வீடுகளை வெளியிலிருந்து மேலோட்டமாக பார்வையிட்ட அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் தங்களின் குறைகள் என்ன என்று கூறுங்கள் என்று சம்பிரதாயத்திற்காக கேட்டனர்.
இந்த ஆய்வின் போது அங்கிருந்த மலைவாழ் மக்களில் ஒருவர் தனது செல்போன் மூலம் அதிகாரிகளின் ஆய்வை படம் பிடித்துள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அரசு அலுவலர்கள் இந்த நபரிடம் இருந்து செல்போனை வலுக்கட்டாயமாக பறித்து அதில் இருந்த படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்தனர்.

அடிப்படை வசதிகள் இன்றி மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் சிலர் இதுபோன்ற அடாவடிகளில் ஈடுபட்ட சம்பவம் மலைவாழ் மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button