உளவு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவது வடகொரியாவின் அடிப்படை இறையாண்மை உரிமை என்றும் அதை விரைவில் விண்ணில் செலுத்தியே தீருவோம் என்றும் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார்.வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையேயான போா் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கூட்டு பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போா் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது.எனவே அமெரிக்கா தென் கொரியா நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. அந்த ஆயதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் சோதித்தது. ஆனால் இந்த சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.
இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உளவு செயற்கைக்கோளை வடகொரியா நேற்று முன் தினம் விண்ணில் செலுத்தியது. இந்த உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ஏவுகணை கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில், அதன் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களை பிரித்ததைத் தொடர்ந்து, உந்துதலை இழந்த காரணத்தால், நடுவானில் வெடித்து கடலில் விழுந்து நொறுங்கியது. இதனால் உளவு செயற்கைக்கோள் செலுத்தும் முயற்சி தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த, தடை செய்யப்பட்ட ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், வட கொரியாவின் உளவு செயற்கைக்கோளால் பிராந்திய நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் வட கொரியாவை அமெரிக்கா சாடியது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜோங் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கா இதுவரை ஆயிரக்கணக்கான உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வடகொரியா உட்பட உலக நாடுகள் அனைத்தையும் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் பிராந்திய நிலைத்தன்மையைக் குலைத்து விடும் என்று அமெரிக்கா கூறுவது நியாயமற்றது. தேசிய பாதுகாப்புக்காக உளவு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவது வட கொரியாவின் அடிப்படை இறையாண்மை உரிமை. உளவு செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்தியே தீருவோம்” என்று கூறினார்.