ஆன்மீகம்செய்திகள்

குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது

விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல வித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியில் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவரை சக்தி வாய்ந்த சாமியார் என்று நினைத்து, இவரிடம் குறி கேட்டு தன்னுடைய குடும்பப் பிரச்சனைகளை பரிகாரம் செய்து தீர்த்துக் கொள்ளலாம் என்று விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 52 வயது பெண், இவரது ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார். இவர் அந்தப் பெண்ணிடம், இறந்து போன உன் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றியமைத்தால் தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார். அதற்கு அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, இந்த போலி சாமியார் அந்தப் பெண்ணிடமிருந்து 2 ½ பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூபாய் 30,000/- கொடுத்து வீட்டை இடித்துக் கட்டச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துக் கட்டியுள்ளார்.

அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் அந்தப் பெண்ணிடம், உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூபாய் 3500/-ம் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன், உனது பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதைக் கேட்ட அந்தப் பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*

*இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.*

*அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி சாமியார் சக்தி என்பவரை கைது செய்தனர். மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button