செய்திகள்

முடிவெடுப்பதில் குழப்பம்

செயல் அலுவலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு வார்டில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ராகிணியை
இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தலைமை அறிவித்த ராகிணியும், கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இம்மறைமுக தேர்தலில் வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ரோகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பு கவுன்சிலர்களில் சிலர் வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு வெளியே சென்றனர். மற்றொரு தரப்பு தாங்கள் தான் வெற்றி பெற்றோம், எங்களுக்கான சான்றிதழை கொடுங்கள் என்று கூறியவாறு சான்றிதழை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தலின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை உடனடியாக அனுப்பும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை எடுக்க முடியாமல் அலுவலர்கள் தடுமாறினர். இதனால் முடிவுகளை அறிவிப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். செயல் அலுவலரின் குழப்பமான செயல்பாட்டால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button