சேவை பெறும் உரிமை சட்டத்தை
தமிழ்நாட்டில் அமல்படுத்த – ம.நீ.ம. கோரிக்கை
லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை
தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். மனுவில், அரசு நிர்வாகமானது துரிதமாகச் செயல்பட்டு அரசின் சேவைகளை எளிய முறையிலும் விரைவாகவும் மக்களுக்குச் சென்று சேர்க்கவேண்டும். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லஞ்சம் கொடுத்துதான் அரசு சேவைகளைப் பெறமுடியும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனால் ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை அரசு சேவைகளில்
தொடங்கி தொழிற்சாலை துவங்க, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி
செய்ய அனுமதி பெறுவது வரையிலான அனைத்து அரசு சேவைகளும் குறித்த
காலத்திற்குள் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லாத நிலை
உருவாகிவிட்டது. இந்த நிலையை மாற்றி, விரைவான, தரமான அரசு சேவைகளை பெறுவதற்கு வழிவகுக்கும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு அரசு சேவையும், இத்தனை நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்பதை உறுதி செய்வதுதான் குடிமக்கள் சாசனத்தின் அடிப்படை நோக்கம்.
மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 21
மாநிலங்களில் இச்சட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில்
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. பின்தங்கிய
மாநிலமாக சொல்லப்படும் பீகாரில் நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள்
ஆகிவிட்டன. ஆகவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே
தமிழக அரசாங்கம் இதற்கான சட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.