செய்திகள்

கம்பி நீட்டிய கைதி

கம்பி நீட்டிய கைதி
போராடி பிடித்த போலீஸ்

பொள்ளாச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோடிய நபரை போலீசார் நீண்ட நேரம் தேடி பிடித்து கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த கருமாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது உறவினர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாணிக்கத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக மாணிக்கத்துக்கும் பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மாணிக்கம் பரமசிவத்தை தாக்கியதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து வந்தனர். விசாரணையின் முடிவில் மாணிக்கத்தை கைது செய்வது என போலீசார் முடிவு செய்தனர். கைதுக்கு முந்தைய நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்காக மாணிக்கத்தை போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் பார்த்து மாணிக்கம் அங்கிருந்து நைசாக நழுவினார்.
தாங்கள் அழைத்து வந்த கைதியை காணாமல் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அதிவேகமாக பரவியதால் நகரம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் தனிப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை துவக்கினர். பல மணி நேர தேடுதலுக்கு பின் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button