கோக்கு மாக்கு
Trending

யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கும்பல் களக்காட்டில் கைது

யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற கும்பலை திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறையினர் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் யானை தந்தம் விற்பனை நடப்பதாக மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி யானை தந்தம் விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது .

தகவலின் அடிப்படையில் மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் களக்காடு வன உயிரின காப்பக துணை இயக்குநர் ராமேஸ்வரன் உத்தரவின்படி வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சாரகர் யோகேஸ்வரன் மற்றும் வனப் பணியாளர்கள் அடங்கிய தனி குழு விசாரணையில் இறங்கியது.

திருக்குறுங்குடி வன எல்கைக்குட்பட்ட ஊச்சிகுளம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்க முயன்ற கும்பலை வனக்குழுவினர் சுற்றி வளைத்தனர்.

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துகிருஷ்ணன் என்ற ராயப்பன் (27), கண்ணன் (44), சரவணகுமார் (43) கிருஷ்ணமூர்த்தி (35) ஊச்சிகுளம் தங்கத்துரை (50) சென்னை ஆவடி அம்பத்தூரை அடுத்த பங்காருபேட்டை சுவாமி விவேகானந்தர் நகர் முருகன் (43), திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே அயப்பாக்கம் நாகராஜ் (54) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.9 கிலோ எடை கொண்ட யானை தந்தம்மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் பன்னாட்டு மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கும்பலில் தப்பி ஓடிய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதில் உள்ளூர் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக தந்தம் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரும், நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button