
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி . இங்கு சுமார் 20,000 – க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன ஏழு உட்கடை கிராமங்கள் உள்ளன.
சிறுமலையில் விவசாயம் மட்டுமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது . கோவிட் – 19 பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் சுற்றுலா தளமாக மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர் . சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த இடத்திலும் மதுபான கடைக்கு அனுமதி வழங்கப்படவே இல்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவல்துறை வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் சிறுமலை பழையூர் புதூர் அகஸ்தியர் புரம் தென்மலை உட்பட சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது .
இப்பகுதி மக்களும் பலமுறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் , காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கதுறை மற்றும் வனத்துறை என சம்மந்தபட்ட அனைவரிடமும் புகார் அளித்துள்ளனர் . பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்கள் கூட நடத்தினர்.
அதே சமயம் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் அனைவருமே ஏதோ ஒரு காரணத்தினால் கள்ள மதுபான விற்பனை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர் .
நேற்று (22/05/2025) சிறுமலைபுதூர் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதற்காக இப்பகுதியில் வசித்து தற்போது வெளியூர்களில் வாழ்ந்து வருபவர்கள் உட்பட அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள சிறுமலை புதூர் பகுதியில் குவித்திருந்தனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள டீக்கடையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் அதனை வாங்கி அருந்திய குடிமகன்களால் கோவில் திருவிழா கூட்டத்தில் விரும்ப தகாத சில சம்பவங்கள் நடைபெற்றதால் கோபம் அடைந்த பெண்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சேர்ந்து கள்ள மதுபான விற்பனை செய்த நபரிடம் திருவிழா நேரத்தில் மதுபானம் விற்கவேண்டாம் என்று கூறியுள்ளனர் .
கோபம் அடைந்த கள்ளச்சந்தை மதுபான விற்பனையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து வேண்டுகோள் விடுத்தவர்களை மிரட்டி தாக்க முயன்று துரத்தியதாகவும் கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடியிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கள்ள மதுபானம் விற்பனை நடைபெற்ற டீக்கடைக்குள் புகுந்து அங்கு விற்பனைக்காக அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபான பெட்டிகளை எடுத்து சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
குறிப்பாக வனப்பகுதியில் விற்பனை செய்யப்படும் கள்ள சந்தை மதுபானம் முழுவதும் வனத்துறை , காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கதுறை அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டு வனத்துறை செக்போஸ்ட் வழியாக சிறுமலை மலை பகுதிக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் இதற்கு உடந்தையாக உள்ள காவல்துறை , மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் வனத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரசு பேருந்து , சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் மறித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.