
மனமகிழ் மன்ற நிர்வாகத்திற்கு பாதகம் இல்லாமல் வழக்கை முடித்த வனத்துறை – திரும்பி கூட பார்க்காத காவல்துறை

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் உள்ள தென்றல் பெட்ரோல் பங்க் பின்புறம் பென்சிங் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் V.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சண்முகத்தின் மகன் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.

இந்த மனமகிழ் மன்ற வளாக பகுதி கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நமது தேசிய பறவையான மயில் இறந்த நிலையில் மிதப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியின் வனகாப்பாளர் தனலட்சுமி சென்று ஆய்வு செய்து அது போன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் அதே மனமகிழ் மன்ற வளாகத்தில் மயில் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதும் அதை இரசியமாக அப்புறப்படுத்த மனமகிழ் மன்றத்தை சேர்ந்த சிலர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறை மாவட்ட , மாநில அளவிலான உயரதிகாரிகளுக்கும் , சிறப்பு படை பிரிவினர்களுக்கும் விலங்குகள் நல ஆர்வலர்களும் பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அய்யலூர் வனசரக அதிகாரிகளுக்கு உயரதிகாரிகள் தெரிவித்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மனமகிழ் மன்ற நிர்வாகத்தினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஓர் முடிவிற்கு வந்தனர்.
விசாரணையின் முடிவில் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த மயில் குறித்து வாய் திறக்காத வனத்துறையினர் மனமகிழ் மன்ற வளாகத்தில் இறந்த நிலையில் கிடந்த மயில் இயற்கையாக மரணமடைந்திருக்கலாம் என்றும் இறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் மனமகிழ் மன்ற நிர்வாகத்திற்கு சட்டவிதிகள் தெரியாமல் இறந்து கிடந்த மயிலை அப்புறப்படுத்தி அருகில் உள்ள புதரில் வீசி எறிந்து உள்ளனர் என கூறியுள்ளனர்.
அதே சமயம் வீடியோவின் இடையில் மனமகிழ் மன்ற ஊழியர் ஒருவர் ஏற்கனவே இது போன்ற சம்பவத்தில் சிக்கி 15000 ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும் கோடி ரூபாய் கொடுத்தாலும் மயிலை அப்புறபடுத்த வரமாட்டேன் என்றும் கூறியுள்ளதை வனத்துறை அதிகாரிகள் மறந்து விட்டனர் போலும் ….
வனதுறையினராவது சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவரை அழைத்து வந்து மனமகிழ் மன்ற நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இயற்கை மரணம் என்று தேசிய பறவைகள் மர்மமாக இறந்த வழக்கை மூடிவிட்டனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை என்றும் தேசிய பறவைகள் மர்மமான முறையில் தொடர்ந்து இதே இடத்தில் இறந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது தேசிய பறவைகளின் மர்ம மரணத்தை விட மர்மமாக இருப்பதாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.