
சட்டவிரோதமாக தெருநாய்களை பிடித்து காற்றோட்டம் இல்லாத தகர செட்டில் அடைத்து வைத்து உணவு தண்ணீர் வழங்காததால் பிடிபட்ட நாய்கள் இறந்து தூர்நாற்றம் வீசியதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை தரம் பிரிக்கும் வளாகம் உள்ளது.
இங்கு உள்ள தகர ஷெட்டில் இருந்து அதிக அளவிலான நாய்கள் குரைக்கும் சத்தமும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவலறிந்த அப்பகுதி விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் அவ்விடத்திற்கு சென்றனர்.
அந்த இடத்தில் ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளைக்கு சொந்தமான TN-74 – AX – 9950 எண் கொண்ட விலங்குகள் மீட்பு வாகனம் என எழுதப்பட்ட வாகனம் நின்ற பகுதிக்கு சென்று அந்த வாகன டிரைவரிடம் விசாரித்த போது பட்டும் படாமல் மழுப்பலாக பதில் அளித்தார் . சந்தேகம் அடைந்தவர்கள் அருகில் இருந்த தகர ஷெட்டில் இருந்து தான் சத்தம் வருகிறது என அங்கு சென்று கதவு சந்து வழியாக பார்த்தவர்கள் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்தே போய் விட்டனர்.
உள்ளே சில நாய்கள் இறந்து சில நாட்கள் ஆகி உடல் உப்பிய நிலையில் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்ததுடன் மேலும் சில நாய்கள் உணவு தண்ணீர் இன்றி மயங்கிய நிலையில் இருந்ததும் மேலும் சில நாய்கள் தற்போது தான் பிடித்து கொண்டு வந்து இங்கு விடப்பட்டதும் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
சிறிது நேரத்திற்கு பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்டவர்கள் உடனடியாக கதவை திறந்து உள்ளே சென்று சாகும் நிலையில் இருந்த மற்றும் புதிதாக விடப்பட்ட நாய்களும் தண்ணீர் உணவின்றி உள்ளதை வீடியோ பதிவாக சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி சுகாதார அதிகாரி சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் கூறுகையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தெரு நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கான விதிகள் உள்ளன . அதில் முக்கிய விதிகளில் ஒன்று சுகாதாரமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தான் அறுவை சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் தெரு நாய்கள் அடைக்கப்பட்ட வேண்டும் என்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் முறையான உணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வேண்டுமென்றே தான் இது போன்ற குப்பை தரம் பிரிக்கும் வளாகத்திற்கு உள்ளே உள்ள காற்றோட்ட வசதி கூட இல்லாத தகர ஷெட்டில் அடைத்து வைத்து உணவு தண்ணீர் வழங்காமல் NGO மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு கொன்றுள்ளனர் என விலங்குகள் ஆர்வலர்கள் ஆணித்தரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இது குறித்து விசாரித்த போது இந்த ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளையின் நிர்வாகி ஷோபா என்பவர் என்றும் இவர் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் 2023 – ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஜல்லிகட்டு போட்டி கண்காணிப்பு குழுவின் நேரடி நியமன உறுப்பினராக இருந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளூர் அதிகாரிகளுடன் கைகோர்த்து பல்வேறு ஊர்களிலும் இதே வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து அவரிடம் விசாரித்தால் ஆவேசமாக மிரட்டுகின்ற தொனியில் பேசிவிட்டு போனை கட் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மட்டுமல்லாது இந்த ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகி மற்றும் கூட்டு சதியில் ஈடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்திடவும் இது போன்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனங்களை கண்காணித்து சட்டவிதி மீறலில் ஈடுபடும் / புகார் வரும் தொண்டு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைத்து விலங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட நிரந்தர தடை விதிக்க மத்திய , மாநில விலங்குகள் நலவாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றது.