கோக்கு மாக்கு
Trending

தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரையில் உள்ள தனியார் வளர்ப்பு யானை குஷ்மா . சமீபத்தில் இந்த யானை பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவரின் தகுதி சான்றிதழ் வழங்கியதன் அடிப்படையில் முறையே 4, 6, 8, , 11 ஆகிய தேதிகளில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதில் கடந்த 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் , பால பாக்கிய நகரில் உள்ள அருள்மிகு வீர சக்தி விநாயகர் கோவில் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது . ஆனால் 5-ம் தேதிக்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை .

ஆனால் எந்தவித அனுமதியும் பெறாமல் திருநெல்வேலி V.M சத்திரம் பகுதியில் ஒரு கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளனர் . இது பெரும் சர்ச்சையாக சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .

இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரித்து பார்த்ததில் இந்த யானையை தவறாக பயன்படுத்திய பல்வேறு புகார்கள் உள்ளதாகவும் உள்ளூர் வனத்துறையினரின் ஆசீர்வாதத்தில் முழு நேர தொழிலாக இதே போன்று முறை கேடாக அனுமதி பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லா கட்டி வந்துள்ளனர்.

மேலும் போக்குவரத்து அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அழகர்சாமி என்னும் தலைமை பாகன் மதுரையில் இருந்த தற்போது வனத்துறையின் திருச்சி M.R பாளையம் யானைகள் முகாமில் உள்ள ரூபாலி என்ற யானையின் பாகனாக இருந்து யானையை வனத்துறை பறிமுதல் செய்து வண்டியில் ஏற்ற முற்பட்ட போது அதை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் யானையை விட்டுவிட்டு இந்த நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் அதற்காக அழகர்சாமி மீது மதுரை வனத்துறையினர் வழக்கு பதிவும் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த குஷ்மா யானைக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி கடிதத்தின் படி பார்த்தால் அடுத்தடுத்து தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதில் மிக முக்கியமாக கால்நடை மருத்துவரின் சான்றை மட்டும் வைத்து தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.

ஒவ்வொரு போக்குவரத்திற்கு முன்பும் பின்பும் கால்நடை மருத்துவரின் ஆய்வு மற்றும் போக்குவரத்து தகுதி சான்று பெற வேண்டும் . அப்படியிருக்கையில் ஒரே ஒரு மருத்துவ சான்றை வைத்து தொடர்ந்து நான்கு நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்ற யானை உரிமையாளரின் திறமையை பாராட்டுவதா அல்லது எதையுமே கவனிக்காமலும் கண்கானிப்பு பணி செய்யாமல் அனுமதி கடிதம் கொடுத்த வனதுறையினரை குறை சொல்வதா என வன உயிரின ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.

இது போன்று இனிமேல் நடக்காதவாறும் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றும் யானை உரிமையாளர்களுக்கு மட்டும் அனுமதி கடிதம் வழங்கிடவும் , சட்ட விதிகளை மீறி செயல்படும் / குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாகன்களை இது போன்ற யானைகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடாதவாறு கடும் நடவக்கை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button