
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில் குடமாடியில் இருந்து, 15 கிமீ துாரம் வனப்பகுதி வழியாக வாழையார் வரை செல்லும் தடம் உள்ளது.
இந்த சாலை பகுதியில் சில மாதங்களாக பெய்த மழையினால் மண்சரிந்து வாகன போக்குவரத்து தடைபட்டதாகவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உரிய அனுமதி இன்றி வனத்துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது , JCB வாகனங்களை கொண்டு சாலை அமைப்பது போன்ற பணிகளை தனி நபர்களுடன் இணைந்து வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த சாலையில் சில தனியார் உயர்தர ரிசாட்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்காக தான் இவ்வளவு அவசர கதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கூட பெறாமல் வனத்துறையினர் பணியினை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வனத்துறையினர் மட்டுமின்றி, ஏற்கனவே மரம் கடத்தலில் ஈடுபட்டதற்காக வழக்கும், அபராதமும் விதிக்கப்பட்ட சில நபர்களும் தற்போது மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . இவர்களை, வனப்பகுதிக்குள் அதிகாரிகள் அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, புலிகள் காப்பக வனப்பகுதியில் மரங்களை வெட்ட அனுமதி கிடையாது. அங்கு சாலை அமைப்பது புதிய கட்டடங்கள் கட்டுவது, மரங்கள் வெட்டுவது என அனைத்திற்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
கட்டளைமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் காய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துகிறோம் என, வன அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தற்போது வெட்டி போடப்படும் மரங்களையும் அவர்கள் கடத்துவர் என்பது வன ஆர்வலர்களின் புகாராக உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சுகுமார் உத்தரவில் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.