கோக்கு மாக்கு
Trending

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படவே இல்லை. பல்லுயிர் பூங்கா ஒன்று பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவில் வனத்துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் திறப்பு விழா அடுத்த மாதம் திறப்பு விழா எனக் கூறிக்கொண்டே பல ஆண்டுகளை கடந்தும் காணல் நீர் போல காட்சி பொருளாக காட்சி தருகிறது பல்லுயிர் பூங்கா .

வேறு எந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமும் இல்லாத நிலையிலும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள குளிர்ந்த சீதோஷன நிலை. இதனை பணமாக்க சிலர் முயல அதற்கு கண்கட்டி வேடிக்கை பார்க்கும் துறை அதிகாரிகள் சிலர் ஒத்துழைக்க இப்போது சிறுமலை எங்கும் ரிசார்ட் -களால் நிரம்பி வழிகிறது . இருந்தும் பணத்தாசையால் மேலும் மேலும் ரிசார்ட் மாபியாகளின் கைகள் விரிவடைந்து கொண்டே போகிறது . அதிலும் பல சரிவான பகுதிகளில் எந்த ஆய்வு , முன்னெச்சரிக்கை, ஆபத்து கால உதவி என எதுவும் இல்லாத மிக ஆபத்தான சரிவுகளிலும் View Point ரிசார்ட்கள் என்ற பெயரில் கட்டி சுற்றுலா பயணிகளின் உயிரோடு விளையாடி வருகின்றனர்.

உதாரணம் :- Coffee Caundy ரிசார்ட்கள்

தற்போது பல கட்டுமான பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகின்றன (நீச்சல்குளம் உட்பட) . கட்டுமான பணிகளுக்காக பல மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன . வெறும் தூர் பகுதிகள் மட்டும் அங்கேயே கிடக்க வெட்டப்பட்ட மரங்களின் பாகங்கள் எங்கே என தெரியவில்லை . ஒரு வேலை அதே பகுதியில் சில மரங்களை வெட்ட அனுமதி பெற்றுள்ளதாகவும் அவற்றுடன் கட்டுமான பணிக்காக வெட்டப்பட்ட மரங்களின் பாகங்களும் லோடு ஏற்றி மரவியாபாரிகள் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர் விசயம் அறிந்தவர்கள்.

இந்த Coffee Coundy ரிசார்ட் ஆர்ச் பகுதி வழியே நுழைந்தால் மட்டுமே சுமார் 50 க்கும் மேலான ரிசார்ட்கள் நம்மை வர வேற்கின்றன . மீட்டிங் ஹால் , இரவு நேர கேளிக்கை என இலட்சங்களில் செலவு செய்யும் பலரும் குவிந்து வருகின்றனர். இதே அமைப்புடன் பல்வேறு இடங்களிலும் உயர்தர கேளிக்கை விடுதிகள் சிறுமலையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.

தற்போது இதே நிலை தான் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது . சிறுமலை மலை பகுதியில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் தற்சமயம் இயங்கி வருவதாகவும் அவற்றில் பல கட்டிடங்கள் வீடு என ஊராட்சி ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளதாகவும் மின் இணைப்பும் இதே போன்று வீட்டு இணைப்பாக காட்டப்பட்டு பல லட்ச ரூபாய்க்கு வரிவிதிப்பிலும் , மின் கட்டணத்திலும் அரசுக்கு வர வேண்டிய வரிவருவாய் வேறு நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

கட்டிட பணிகளுக்கான பாறைகள் மலையிலேயே உடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் (ம) கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் உள்ள பாறைகளை வெடிவைத்து உடைத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

இதர கட்டுமான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ( JCB , KITTACHI , Borewell வாகனங்கள் உட்பட ) முழுவதும் சிறுமலை வன சோதனை சாவடியை கடந்து எந்த தடங்களும் இன்றி மலைக்கு சென்று பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து வனத்துறை வட்டாரங்களில் ஆளும் கட்சி முக்கிய புள்ளி வரும் 2026 தேர்தல் நேர பணத்தேவைக்காக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்கிறாராம் . அவரை மீறி அணுவும் அசையாது சிறுமலை பகுதியில் என்கின்றனர்.

மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் இவப மற்றும் முன்னால் தமிழக வனத்துறையின் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவின் இயக்குநராக இருந்து தற்போது திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலராக இருக்கும் காஞ்சனா இவப மற்றும் எந்த புகாராக இருந்தாலும் 30 நாள் அவகாசம் அளித்தால் குற்றம் களையப்படும் என்று கூறும் மாவட்ட ஆட்சியர் சரவணன் இஆப ஆகியோர்களால் கூட இயற்கை அன்னையின் கொடையாக திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிடைத்த சிறுமலை பகுதியை காப்பாற்றி சட்ட விதிகளை அமல்படுத்த முடியவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது தான் .

வேறென்ன சொல்ல முடியும் எல்லாம் அந்த சிறுமலை வெள்ளிமலை ஆண்டவனுக்கே வெளிச்சம் என உள்ளூர் மக்களும் வன ஆர்வலர்களும் புலம்பி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button