
வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டி கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்து வந்துள்ளனர்.
சசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே உள்ள தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் துப்பாககியுடன் சுற்றி திரிந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பதும், அவர்கள் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, அவற்றை சமைத்து, மாலை நேர சில்லி சிக்கன் விற்பனை கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது வனப்பகுதிக்குள் புகுந்து வவ்வால்களை வேட்டையாடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.