
புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள் தான் பயணிபுறாக்கள் எனப்படும் காட்டுபுறாக்கள். இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்க தொடங்கினால் அந்தக் கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகும்.
1873 – ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி மெக்ஸிகன் நகரில் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிபுறாக்கள் சாரைசாரையாக பறந்து கொண்டே இருக்கும் காட்சிகள் அந்நாட்களில் மிக சாதாரணமானவை. அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானது போல மாறிவிடும். இப்படி பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து பரவசபடுத்தியது தான் அதற்கு எமனாக அமைந்தது. வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறிய போது அவர்கள் இந்த புறாக்களை வேட்டையாட தொடங்கினார்கள்.
இவற்றை வேட்டையாடுவது எளிதான ஒன்றாக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டே பல புறாக்கள் இறந்து விழுந்தன. கூட்டமாக பறக்கும் போது ஒரு கட்டையை வீசி எறிந்தாலே பல புறக்கள் செத்து அல்லது காயமடைந்து விழுந்துவிடும். ஒரு கட்டத்தில் இந்த பறவைகளை அதிகமாக கொன்று குவித்து ரெயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்ப தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. புறாக்கறி விலை மலிவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. இதனை பயன்படுத்தி முழுநேர வேலையாகவே செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள்.
1855-ல் நியூயார்க் நகருக்கு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869-ல் மெக்ஸிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுவாக இந்த வகை பெண்புறா ஆண்டுக்கு ஒரு முட்டைதான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதனால் 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிபுறா தள்ளப்பட்டது.
உலகின் கடைசி பயணிபுறாவான மார்த்தா சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1-ந்தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.

தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற மனிதனின் எண்ணத்தால் ஏகப்பட்ட உயிரினங்கள் இன்று உலகில் இல்லை. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனால் புதிய உயிரினத்தை உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.
நன்றி : உயர்திரு பத்திரசாமி (இ வ ப ) அவர்கள் -(முன்னாள் மாவட்ட வன அதிகாரி )