பிஞ்சுகளிடம் இலஞ்சம் – அஞ்சாத அங்கன்வாடி பணியாளர்கள்
அரசு நிதியில் செயல்படும் அங்கன்வாடியில், ஊதியம் என்ற பெயரில் பிஞ்சு குழந்தைகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளர்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரத்தில் 113 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் பணியமர்த்தப்படுவர். அதன்படி நயினாரகரம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம் அருகே உள்ள காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பிரேமா என்கிற பணியாளரும், மைதீன் பீவி என்கிற உதவியாளரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் 35 குழந்தைகள் உள்ளனர்.
தமிழகத்தின் எந்த ஒரு இடத்திலும் நடக்காத மிகக் கேவலமான செயல்கள் இந்த அங்கன்வாடி மையத்தில் அரங்கேறி வரும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, இந்த அங்கன்வாடி மையத்திற்கு ஒருவர் சரிவர பணிக்கு வர மாட்டார். மற்றொருவர் குழந்தைகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்படும் முட்டை மற்றும் உணவுப்பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்று காசு பார்க்கிறார்.
இதைவிட கொடுமை உணவு, பணியாளர் ஊதியம் என அனைத்திற்கும் அரசு நிதி ஒதுக்கும் நிலையில், இவர்களாகவே கூடுதலாக பணியில் அமர்த்திய ஒருவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி குழந்தைகளின் பெற்றோரிடம் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.
நயினாரகரம் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக உள்ள பா.ஜ.க. பிரமுகரின் மனைவியே இந்த கூடுதல் பணியாளர். இவருக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, ஒவ்வொரு குழந்தைகளிடமும் மாதம்தோறும் தலா 150 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.
கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியாது என்பதற்காக அரசு சார்பில் இலவசமாக நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களை அனைவரும் நாடுகின்றனர். ஆனால் இங்குள்ள பணியாளர்கள் மாதக் கட்டணம் என்று கூறி கட்டாய வசூலில் ஈடுபடுவது மிகவும் கொடுமையானதாகும். அங்கு படிக்கும் குழந்தைளின் பெற்றோரிடம் மாதக் கட்டணம் கேட்டு வெளியான ஆடியோ தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் இப்போதே லஞ்சத்தை விதைக்கும் இதுபோன்ற பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் வேறு எங்கும் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாமல் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.