தி.மு.க. வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவரை தாக்கியதாக மாஜி அமைச்சர் மீது புகார்.
தி.மு.க. விற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தலைஞாயிறு பேரூராட்சியில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ. வுமான ஓ.எஸ்.மணியனின் சொந்த வார்டான 13 வது வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்ல் பணியாற்றியுள்ளார்.
மேலும் அவர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க. வுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அஜய் ராஜா வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று தலைஞாயிறு பகுதியில் நின்று கொண்டிருந்த ஜெகனை, அவ்வழியாக வந்த ஓ.எஸ்.மணியன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெகன் தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தற்போது நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைஞாயிறு பகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வி. னர் ஏராளமானோர் திரண்டு இருப்பதால் அங்கு பரப்பான சூழல் நிலவி வருகிறது.
செய்தியாளர் ராஜேஷ்,
நாகப்பட்டினம்.