செய்திகள்

தலைவர் தேர்தலுக்கு தடை

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி: மறைமுக தேர்தலுக்கு தடை

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற இருந்த மறைமுக தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வருகிற 26ம் தேதி நடக்கிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற இருந்த மறைமுக தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு வார்டில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ராகிணியை
இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
கடந்த 4ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் தலைமையில், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராகிணியும், கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இம்மறைமுக தேர்தலில் வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ராகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராகிணியின் தந்தை ஆறுச்சாமி திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு வெளியே சென்றார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பிறகு வனிதாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த தேர்தலை ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் அறிவித்தார். இதனையடுத்து கவுன்சிலர் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்குள் மறைமுக தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காக மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் வருகிற 26ம் தேதி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button