
visilmedia
கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற அத்ரி கோவிலில் தகடுகள் வைத்து பரிகார பூஜை
பூசாரி மீது பரபரப்பு புகார்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற அத்ரி என்ற கோரக்கநாதர் கோவிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலில் நாள்தோறும் நித்திய பூஜையும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கோரக்கர் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கடையம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் அத்ரி கோவிலில் பூசாரியாக பழனி என்பவர் பூஜை செய்து வருகிறார்.
இவர் அரசின் விதிமுறையை மீறி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளது . கோவில் மூலஸ்தானத்தில் ஏகப்பட்ட தகடுகள் வைத்து பூஜை செய்து வருகிறார்.
யாருக்காக இந்த பூஜை மேற்கொள்கிறார். ஆகம விதிமுறையை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் கோவிலின் புனிதம் மற்றும் வழிபாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தடியங்காய் வைத்து பரிகார பூஜைகள் நடத்துகிறார்.
பக்தர்கள் பூஜைக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களை தவிர்த்து விட்டு ஏற்கனவே பூஜை செய்யப்பட்டு விட்டது என தவிர்த்து வருகிறார்.
எனவே அரசு விதிமுறையை மீறி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் வேறு பூசாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்..