
பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள்
*வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. வனப்பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.இதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் காப்பு காடு பகுதிகள் உள்ளன. இங்கு மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, மயில், நரி, ஓநாய், உடும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.இந்த காப்பு காடுகளை சுற்றியுள்ள வண்டலூர், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், ஊனைமாஞ்சேரி, காரணை புதுச்சேரி போன்ற கிராம ஊராட்சிகள் தங்கள் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டுகின்றனர். இரவு நேரங்களில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வரும் மான்கள், குப்பையில் கிடக்கும் பொருட்களை உண்டு மரணம் அடைகின்றன. இறந்து போன பல மான்களின் எச்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது.குறிப்பாக, சுமார், 20-க்கும் மேற்பட்ட மான்கள் கடந்த சில மாதங்களில் உயிரிழந்துள்ளன. வண்டலூர் காப்பு காடுகளின் எல்லைகளை ஒட்டிய பகுதிகள் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளன. வனப்பகுதிகள் பல இடங்களில் சமூக விரோதிகள் போட்டு செல்லும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் நிறைந்த குப்பை மேடாக மாறி வருகின்றன. எனவே, வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் கொட்டியுள்ள குப்பை குவியல்களை முற்றிலுமாக அகற்றி, இனி குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, வண்டலூர் காப்பு காடுகளையொட்டிய பகுதிகள் முழுவதும் குப்பை கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் போடுவதால் வனத்தில் உள்ள மண் மலட்டு தன்மையாவதற்கும், அங்குள்ள பல அரிய வகையான மரங்கள் அழிந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுவதால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடைந்த பாட்டில் துண்டுகள் வனவிலங்குகளின் காலில் குத்தி, காயமடைந்து இதனால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது.இதனால் மான்கள் தொடர்ந்து இறந்து வருகின்றன. இன்னும் எத்தனை மான்களை உயிர் பலியாக தரப்போகிறோம் என்பதை குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகங்களும், வனத்துறையும், தமிழக அரசும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறையின் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலுமாக நிறுத்த முடியும்.இல்லையெனில் வனம் மற்றும் வன விலங்குகளின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் குப்பைகள் அதிக அளவில் சேகரமாகிறது. இந்த குப்பைகளை கையாள்வதில் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது.அதிக அளவில் குப்பைகள் எடுத்தால் செலவினங்கள் காண்பிப்பதில் ஊராட்சி நிர்வாகங்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் குப்பைகளை வனப்பகுதியில் கொட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வன வளத்தை கெடுப்போர் மீது குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வன உயிரின பாதுகாவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.