
உ
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
முழு விசாரணைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் மூலம் உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்) பெயர்கள் பட்டியலில் இன்னமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17.5 லட்சம் (2.2 சதவீதம்) பேர் பீஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தவிர, 5.5 லட்சம் (0.73 சதவீதம்) வாக்காளர்கள் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்தமாக 35.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியலில் 4.5 சதவீதம் ஆகும். ஜூலை 25ம் தேதிக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி விசாரணை தொடங்கியது.
ம
இருதரப்பினரது வாதங்களை கேட்ட பின்னர் இ நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சிறப்பு திருத்தப்பணியை மேற்கொள்வது ஏன்? முன்கூட்டியே திருத்தப் பணியை மேற்கொண்டு இருக்கலாமே?
தற்போது எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை ஜூலை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இப்போதைய சூழலில் சிறப்பு திருத்தப் பணிக்கு மனுதாரர்கள் தரப்பில் இடைக்கால தடை கோரப்படவில்லை. பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அந்த மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக ஜூலை 28-ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்…