
அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். அண்ணாமலைக்கு சீட் தராதது பற்றி பல்வேறு தகவல்கள் உலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்காகவே அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் சீட் தர விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன்றில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதத்துக்கு காரணம் அண்ணாமலை தான். அவரால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் என பாஜகவிற்குள் பலருக்கும் வருத்தம் இருந்தது. நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை, இந்த நபருக்கு இந்த சீட் என பிளான் போட்டுத்தான் வாங்கினார். அண்ணாமலைக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதுதான் நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.
நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவராக செயல்படவில்லை எடப்பாடி பழனிசாமியின் எண்ணப்படி தான் செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தமக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்க வேண்டும் என்றுதான் செயல்பட்டார். இந்த 2 பேருமே அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என நினைத்தனர்.
அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட போது ராஜ்யசபா எம்.பி பதவி, மத்திய அமைச்சர் பதவிகளில் ஒன்றை பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். தேசிய பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அமித்ஷாவோ மாநில அரசியலில் அண்ணாமலையை வைத்துக்கொள்ள விரும்பினார்.
அண்ணாமலை பல இளைஞர்களை ஊக்குவித்தார். அவரால் ஈர்க்கப்பட்டு பலர் கட்சிக்குள் வந்தனர். எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் ஆகியோர் தேர்தலில் நிற்க வேலை பார்த்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இந்நிலையில் சமீபத்தில் தான் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் அண்ணாமலை பெயர் இல்லாதது பாஜகவிற்குள் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது