
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் தலைமையிட வனசரகமாகவும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருப்பது சிறுமலை.

இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வாகன எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் பட்டா நிலங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது . மலைப்பகுதியின் பெரும்பகுதி வன நிலமாகவும் மீதம் உள்ள இடத்திலும் பெரும்பகுதி அரசு புறம்போக்கு நிலமாகவும் உள்ளன.

தங்குவதற்கு போதிய அளவு தங்கும் விடுதிகள் இல்லாது இருந்த நிலையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிலர் வனத்துறை , வருவாய் துறை , ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அனுமதி இன்றி தங்கும் விடுதிகள் கட்டி கொள்ளை லாபம் பார்க்க தொடங்கினர் . இதற்காக JCB , KITTACHI , Borewell வாகனங்கள் வனச் சோதனை சாவடியை கடந்து செல்ல ஆரம்பித்தன . அன்று ஆரம்பித்த மலை அழிப்பு இன்றுவரை தொடர்வதுடன் மாவட்டத்தில் பணம் கொழிக்கும் பகுதியாகவும் வனத்துறையில் மாறியது.

தற்போது சுமார் 500 -க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன . இவற்றிற்கு சம்மந்தப்பட்ட மாநில நிர்வாத்தின் கீழ் உள்ள HACA கமிட்டி ( இது மாநில அளவிலான மலைப்பகுதி பாதுகாப்பு குழு ) , மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள HP கமிட்டி ( இது மாவட்ட அளவிலான மலைகள் பாதுகாப்பு குழு ) ஒப்புதல் உட்பட உரிய அனுமதி பெறப்படாமலேயே நடத்தப்படுகிறது. இவற்றில் பல தங்கும் விடுதிகள் வீடுகள் என மின் இணைப்பு பெற்று இயங்கி வருகின்றன. இது குறித்து தற்போது உள்ள வனத்துறையினரிடம் கேட்டால் இது எல்லாமே நாங்கள் வருவதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் இவைகள் என்றும் பட்டா நிலத்தில் நடப்பவைகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். ச

ஆனால் கட்டுமான பொருட்கள் உட்பட அனைத்தும் வனத்துறை சோதனை சாவடியை கடந்து செல்கையில் தான் கொள்ளை லாபம் கிடைக்கிறது வனத்துறைக்கு என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள் .

வனத்துறை அதிகாரிகளை கவனிக்காத நபர்களின் பொருட்கள் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர் . பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்த செய்தி சோதனை சாவடிக்கு கிடைத்தவுடன் அந்த பொருட்கள் உடனடியாக மலைக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

இதில் ஒவ்வொரு கட்டிடம் கட்டும் பணி தொடங்கும் முன்பும் சில லட்சங்கள் வரை கை மாறுவதாகவும் உயரதிகாரிகளிடம் புகார் சென்றாலும் கிடப்பில் போடப்பட்டு விடுவதாகவும் சிறுமலை வன சோதனை சாவடி CCTV கேமரா மற்றும் வயர்லெஸ் கருவி கூட பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய நிலையில் மூன்று ஆண்டுகள் பணி காலம் முடிந்த நிலையில் பல லட்சம் செலவு செய்து இதே DFO – ன் கீழ் உள்ள பகுதிக்கே பணியிட மாறுதல் பெறுவதற்கான வேலை முடியும் தருவாயில் உள்ளதாகவும் இந்த இடத்திற்கு பலர் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எப்படியும் சிறுமலையில் சம்பாதித்து விடலாம் என குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்களை போன்ற வன துறையிருக்கு வசதியாக பணியிட மாறுதல் வலைதளமும் பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு உதவுவதற்காக வருங்கால ஒன்றிய செயலாளர் ஒருவர் இரவு பகல் பாராமல் போனும் கையுமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் அமைந்துள்ள வேலுநாச்சியார் வளாகம் வனத்துறை அலுவலத்தை சுற்றி சுற்றி வருவதாகவும் தகவல்.