
வண்ணாரப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
சென்னை புது வண்ணாரப்பேட்டை மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் என்பதும், அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மேல்மாடியில் இருந்து மதுபோதையில் தவறி கீழே விழுந்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா, என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த விசாரணையில் அவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தின் ‘ஏ’ கேட்டகிரி சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே உறுதியாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துறைமுக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

