
விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் கட்சியை காட்டி கொடுத்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
5 தொகுதி இடை தேர்தல் தடையை நீக்க கோரி விராலிமலை சி.விஜபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக முன்னிறுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் எதற்காக ராஜினாமா செய்தார்கள் என கேள்வி எழுப்பிய அவர், அவர்களுக்கு மக்கள் பணி செய்ய முடியாத அளவுக்கு உடல் ரீதியாக, மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு விட்டதா என வினாவினார். தொடர்ந்து, 2 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக கட்சியில் இந்த 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது கல்லூரி, கல்குவாரி கட்டுவதற்கா என கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு சேவை செய்யவும், தொண்டர்களை பாதுகாக்கவும், சோதனை காலத்தில் கழகத்திற்கு துணையாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கையிலும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து, மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்ட அதிமுகவில் இருந்து சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு கட்சியை காட்டி கொடுத்துவிட்டு த.வெ.க-வுக்கு சென்று விட்டதாக குற்றம் சாட்டிய அவர், த.வெ.க-வினர் இவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.


