
சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சி.பி.மூவேந்தன் கலந்து கொண்டு நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கட்சி குறித்த தங்களது கருத்துகளையும், அதிருப்திகளையும் வெளிப்படையாக தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கட்சிப் பணிகளில் ஈடுபடாதவர்களின் பதவிகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய மாவட்ட பொறுப்பாளர் சி.பி.மூவேந்தன், அ.தி.மு.க.வின் கடந்த கால அரசியல் நிலவரங்களை சுட்டிக்காட்டி, கட்சியில் ஒரு பொறுப்பில் இருப்பவர் மாற்றுக் கட்சிக்கு சென்றாலும், அந்தப் பொறுப்பில் பணியாற்ற கட்சிக்குள் ஏராளமானோர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மூவேந்தனின் கருத்தைத் தொடர்ந்து கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் அங்கிருந்து சென்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே நிர்வாகிகளிடையே ஏற்பட்ட இந்த கருத்து மோதல், அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

