
சென்னை திருவொற்றியூர் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்றில் சுமார் 2 டன் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், மீன்கள் இறந்ததற்கு மனிதக் கழிவுகள் கலந்ததே காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்ததாக கவுன்சிலர் சிவகுமார் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மண்டலக் குழுத் தலைவர் தனியரசு, ஆற்றில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும், மீன்கள் இறந்ததற்கும் கழிவுநீருக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் சிவகுமார் வெளிநடப்பு செய்தார். அவருடன் 2-வது வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷும் வெளிநடப்பு செய்தார்.இதனை தொடர்ந்து, மீன்கள் இறந்ததற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்றும் வார்டு வளர்ச்சிப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

