
கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக வெற்றி பெறும் என ஜோதிட ரீதியாக தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்காக ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். பின்னர் கட்சியில் சேர்வதற்கு முன்பு கரூர் கம்பெனி தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அந்தப் பேச்சுவார்த்தைக்கான ஆதாரங்களும், பதிவுகளும் தன்னிடம் இருப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார். இதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் குறித்து பேசிய போது தனக்கு கோபம் ஏற்பட்டதால் அந்த விவரத்தை வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் கனிமொழி கூறினார். சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை எனக் கூறி, தன்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். தொடர்ந்து, 2031-ம் ஆண்டு தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி இருக்காது என்றும் அவர் நம்பிக்கையாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் முழுமையான ஆட்சி அமைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படுவதாகவும், அதன் பிறகு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


