
விசில் அடித்த த.வெ.க கவுன்சிலரால் பரபரப்பு; கவுன்சிலரான அல்லா பிச்சையை 2 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய கோரி மேயர் உத்தரவு அளித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் கூட்டத்திற்கு கவுன்சிலரான அல்லா பிச்சை கலந்து கொண்டார். அவர் தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் த.வெ.கவுக்கு மாறியுள்ளார். இந்நிலையில் அவர் த.வெ.க. கட்சி துண்டை அணிந்தபடி கூட்டத்திற்கு வந்தார். பின்னர் கவுன்சிலர் அல்லா பிச்சை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த விசிலை எடுத்து ஊதினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரோடு வாக்குவாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இனி விசில் அடிக்க கூடாது என்று மேயர் எச்சரித்தார். ஆனாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் பின்னரும் 2 முறை விசில் அடிக்கவே மாமன்றம் போராட்ட களம் போல் மாறியது. தி.மு.க கவுன்சிலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. நிலைமை மோசமாகவே மேயர் ராமகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு மாமன்ற கூட்டத்திற்கு வந்து விசில் அடித்த கவுன்சிலர் அல்லா பிச்சையை மேற்கொண்ட 2 கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
