
த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவானித்தனம் செய்ததால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது, நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிட அரசுகளின் நீர்ப்பாசன துறையில் நீண்ட காலம் அமைச்சராக இருந்த துரைமுருகன் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடியார் போன்ற பொதுப்பணித்துறையில் அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை கேட்பதன் மூலம் நமது நதி பிரச்சனையை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் விவசாயிகளின் எண்ணம் என கூறினார். தொடர்ந்து, அதனை த.வெ.க அரசு இதனை செய்யாமல் தவிப்பதற்கு காரணம், ஆட்சி அமைப்பதற்கு அவர்கள் செய்த தில்லுமுல்லுகள், களவானித்தனம் தான் என தெரிவித்த அவர், இதனால் திமுக தலைவரையும் அதிமுக பொதுச் செயலாளரையும் சந்திப்பதற்கே அவர்களுக்கு தயக்கம் இருக்கலாம் என்றும், அதனால் தள்ளிப் போடுகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.