
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரிய முறையில் மக்களை சந்திக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அஜிதா அக்னல் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்ட இயக்கம் என தெரிவித்தார். 1976ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சிறையில் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததாகவும் அஜிதா அக்னல் குறிப்பிட்டார். சிட்டிபாபு உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது ஆட்சியாளர்கள் உரிய முறையில் மக்களை சந்திக்கவில்லை என விமர்சித்த அவர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடி வருவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்ததாக கூறினார். அதன் பின்னர், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக செயல்பட்டு வருவதாகவும், எத்தனை பேர் வந்தாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அஜிதா அக்னல் தெரிவித்தார்.

