
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் நடைபெற்ற வெப்ப அபாய மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிலரங்கத்தை துவக்கி வைத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்போது, வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை காப்பது குறித்து பயிலரங்கங்கத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பேரிடர் காலங்களில் உடனடி நிவரான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, டெல்டா விவசாயிகளின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்த அவர், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
