முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது!

“ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் சில வலிகளை மறக்கவே முடியாது “என கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் போது முதலமைச்சர் விஜய் உருக்கமாக பேசிய பேச்சுக்கள் தான் இவை.
தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட போது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டை அதிரச்செய்த இந்த சம்பவம் அப்போதைய அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது. மேலும் அந்த சம்பவத்தின் போது மக்களை சந்திக்காமல் சென்ற விஜய் மீது கடுமையான விமர்சனங்களை பலரும் முன்வைத்தனர். மேலும் விஜயின் அரசியல் பிரவேசத்தில் கரூர் சம்பவம் மறக்க முடியாத கருப்பு நிகழ்வாக மாறியது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு , அதன் பின்பாக சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் என பலவித விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இரண்டு முறைக்கு மேல் ஆஜராகி சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தவேக அரசியல் பிரவேசத்தில் கருப்பு நாளாக மாறிய கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தும் வகையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக முதலமைச்சர் விஜயால் அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கரூருக்கு சென்ற விஜய் “தனது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத வேதனையை நிறைந்த சம்பவம்” கரூர் சம்பவம் என மிக உருக்கமாக குறிப்பிட்டார்.
மேலும் “அப்போது இருந்த ஆட்சியில் உள்ள காவல்துறை ஒழுங்கான பாதுகாப்பை வழங்கி இருந்தால் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்காது” என காவல்துறையின் மீதும் குற்றச்சாட்டை முன் வைத்தார் முதலமைச்சர் விஜய்.
இந்த நிலையில் அரசியல் கட்சி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எப்படி அரசு பணி வழங்க முடியும் ? என கூறி நாதக மற்றும் சில அமைப்புகள் சேர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .அதில் கருணை அடிப்படையில் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டால் இது போன்ற பல சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கோரி முன் வர வழி வகுக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல இந்த நியமனங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 16வது பிரிவுகளுக்கு நேரடியாக முரணாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் அரசு பணியிடங்கள் மாநில அரசால் எளிதில் வழங்கப்பட வேண்டிய அல்ல அவை தகுதியின் அடிப்படையில் பெற வேண்டியவை எனவும், அவற்றின் மதிப்பும் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும் என்றும் வேலை வாய்ப்புக்காக பலரும் காத்திருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
முதலமைச்சரை நேரடியாக கரூருக்கு அழைத்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது கையாலே பணியாணையை கொடுக்க வைத்து தற்போது அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் செய்வதரியாது திகைத்து நிற்கின்றனர்.
மேலும் அரசியல் வட்டாரத்திலும் தவேக கட்சிக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்திய கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அரசு பணி வழங்கி அதனை சமன் செய்ததாக நிம்மதி பெருமூச்சு விட்ட தவேகவினருக்கு நீதிமன்ற தீர்ப்பு ஆப்பு வைத்ததாகவே எதிர்க்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது !
சதீஷ்
செய்தி ஆசிரியர்
