
தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் வழக்கு இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து, தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் போட்டியிடுகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் ஏற்கனவே அதிமுகவில் இருந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியினர் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

