
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் மெத்தம்பெட்டமின் போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரூ.6 கோடி மதிப்பிலான இந்த போதைப்பொருள் மும்பையிலிருந்து கோவா மற்றும் பெங்களூரு வழியாக உடுமலைப்பேட்டைக்கு கடத்திச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரகுவை கைது செய்த சிப்காட் போலீசார், போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் மேலும் யார் யார் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சித்தாபுரா பகுதியில் உள்ள கிரீன்லேண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த எக்ஸெல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே நாகம்புதூரைச் சேர்ந்த ஜெய்சன் ஆகிய இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், எக்ஸெல், ஜெய்சனின் மூன்று வங்கிக் கணக்குகளை பெற்று போதைப்பொருள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிப்காட் போலீசார் பெங்களூரு சித்தாபுராவில் கண்காணிப்பில் ஈடுபட்டு, எக்ஸெல் மற்றும் ஜெய்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
