
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு செல்ல இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் செயின் மாயமானது. மேலும், இது குறித்து அவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்கள் பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதி, பூஜா ஆகிய இருவரையும் சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று இவர்கள் வேறு ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
