
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பின்னர் போராட்டத்தில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் கிடைக்காமல் விடுபட்டுள்ள ஓய்வூதியர்கள் மற்றும் புதிதாக ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்கள் அவசர சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையில், அரசு அங்கீகரிக்காத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதற்கான முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து, கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளிலும் ஓய்வூதியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

