
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக மேற்பார்வையாளராக ராஜ்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அரசு ஒப்பந்தக்காரர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து, ராஜ்குமார் தங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக வேலை வழங்கி வந்ததாகவும், வேலையை முடிக்காமல் பணம் கேட்ட ஒப்பந்ததாரரிடம், வேலை முடிந்த பிறகே பணம் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்ததால், அவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ராஜ்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


