
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரைத் தொடர்ந்து, நேருவின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த எஃப்ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கட்சி நிதி என்ற பெயரில் டெண்டர் தொகையில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.