
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய வத்தலக்குண்டு பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் வைத்திருப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையில் வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கௌதமன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. ராம்சேட் தலைமையிலான காவல் துறையினர் 05.09.2026 அன்று பழைய வத்தலக்குண்டு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, டி.ராஜகோபாலன்பட்டி முகவரியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் ராதா கிருஷ்ணா (26) என்பது தெரியவந்தது. அவரது இருசக்கர வாகனப் பெட்டியைப் பரிசோதித்த போது, அதற்குள் இருந்த ஒரு கூரியர் கவரில் 200 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிரி ராதா கிருஷ்ணாவைக் கைது செய்து அவரிடமிருந்த 200 போதை மாத்திரைகள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எச்சரிக்கை சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.
