
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி.. வெறிச்சோடி காணப்படும் புதிய சார்பதிவாளர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் நிலக்கோட்டையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தித்திற்குள் சார்பதிவாளர் அலுவலகம் மட்டுமல்லாது வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு சார்நிலை கருவூலம், மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றங்கள், வட்டார கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு அலுவலகங்கள் நிலக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக உள்ளது.
இந்நிலையில், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அருகிலேயே சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க போதுமான இடவசதி இருந்தும் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் நிலக்கோட்டையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் உயில் சாசனம் பதிவு செய்ய வருபவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து தள்ளி இருப்பதாலும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததாலும் புதிய அலுவலகத்திற்கு வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், புதிய இடத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில்இல்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் தாலுகா அலுவலக வளாகம் அல்லது பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

