
சென்னை திருவொற்றியூர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் தெருவைச் சேர்ந்தவர மகேந்திரன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு தனது மகள் திருவளர்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மகேந்திரன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், பின்னால் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென இருசக்கர வாகனம் வலதுபுறம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தால் அருகில் வந்த லாரியின் பின்புற இடது டயரில் சிக்கிய திருவளர்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது விபத்தில் உயிரிழந்த திருவளர்செல்வி ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், அதன் பூட்டு அணைக்கப்படாமல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


