
நாடு முழுதும் பயனாளர் வசதிக்காக செல்போன் செயலிகள் மூலம் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ நிறுவனங்கள் கார் மற்றும் இரு சக்கரவாகன சேவைகளை இயக்கி வருகிறது. இந்த செயலிகளில் பயணத்தை முன்பதிவு செய்யும்போதே டிப்ஸ் கொடுத்தால் விரைவாக சேவை கிடைக்கும் என்ற வகையில் பயனாளர்களிடம் கூடுதல் தொகையை கேட்கும் வசதியை வைத்து இருக்கின்றனர். இந்த டிப்ஸ் முறைக்கு மத்திய அரசு தற்போது செக் வைத்து இருக்கிறது. பயணிகள் கூடுதல் பணம் செலுத்தினால்தான் விரைவாக கேப் கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடம் திணிப்பது போல் இருப்பதாகவும், இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறிய மத்திய அரசு இதற்கு தடை விதித்து இருக்கிறது. மேலும் 2025-ஆம் ஆண்டின் Motor Vehicle Aggregator Guidelines-ன்படி, டிப்ஸ் என்பது பயணிகளின் முழுமையான விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும், பயணம் முடிந்த பிறகே டிப்ஸ் வழங்கும் வசதி காட்டப்பட வேண்டும். எனவே, பயணம் தொடங்குவதற்கு முன்போ அல்லது பயணத்தை முன்பதிவு செய்யும் நேரத்திலோ டிப்ஸ் வழங்கும் வசதியை கேப் நிறுவனங்கள் வழங்கக்கூடாது. பயணிகள் சேவையில் திருப்தி அடைந்திருந்தால், பயணம் முடிந்த பிறகு தங்களது விருப்பப்படி ஓட்டுநருக்கு டிப்ஸ் வழங்கலாம். பயணிகளிடம் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்தும் அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மாணவ மாணவிகள் இளைஞர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து இருகின்றனர்.
