
தேனி மாவட்டம் வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை, புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வருஷநாட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், மலைக்கிராம மக்களை வெளியேற்றும் இந்த திட்டத்தை திமுக அரசுதான் கொண்டு வந்ததாக குற்றம் சாட்டினார். மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மேகமலை விவகாரத்தில் பிரதமர் தலையிடுவதற்கான எந்தவிதமான முகாந்திரமும் தற்போது இல்லை என தெரிவித்தார். மேலும், மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், நீண்டகால குடியிருப்பு உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


