
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமை வகித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி உள்ளனர். அதை தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு கொரில்லா வேடமணிந்த நபர் மூலம் லேசாக அடி கொடுத்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி உணர்த்தினர். மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, ஹெல்மெட் அணிவது அபராதத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமல்ல; உயிரைக் காப்பாற்றுவதற்காக என்ற விழிப்புணர்வு வாசகத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

