
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களின் தரிசன வரிசையில் நின்று, அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்குவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களின் புனிதத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில், சிலைகளை புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்வது போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

