
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து, இயக்கத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட வாரியாக மறுசீராய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் வைத்து தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர் பிரபு மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் பங்கேற்று, காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு குறித்து பேசினர். இதையடுத்து நகரம், ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டலத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் குறித்த தகவல்களையும் மேலிடப் பார்வையாளர் பிரபு அறிவித்தார். அப்போது, கடையநல்லூர் நகரத் தலைவர் பதவி தொடர்பாக தற்போதைய நகரத் தலைவர் அபுதாகீர் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தங்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும் எனக் கூறி, மேலிடப் பார்வையாளர் பிரபு முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மறு சீரமைப்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன் கட்சிப் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக சமரசம் மேற்கொள்ள வந்த மேலிடப் பார்வையாளர் மற்றும் மாவட்டத் தலைவர் முன்னிலையிலேயே நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



