
தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகள் கொரிய நிறுவனத்துடன் இணைந்து கொண்டுவர உள்ள கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வலியுறுத்தினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கப்பல் கட்டும் தளம் அமைந்தால் உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். முதல்வர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் பெயரை காலை உணவுத் திட்டத்திற்கு சூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், காமராஜர் பிறந்தநாளில் ஆலயங்களில் சமபந்தி விருந்து நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், விஜய் பிரதமர் கருத்துக்கணிப்பில் மோடி, ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பிரதமராக வேண்டும் என்றால் வடமாநில மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என தெரிவித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்போது WWE ரெஸ்லிங், குத்துச்சண்டை போன்று இருப்பதாக விமர்சித்த அவர், இதனால் மக்கள் வெறுப்படைவதாக கூறினார். எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்குவது குறித்தும் விமர்சித்த அவர், ஒரே நபருக்கு பல கார்கள் வழங்குவது அரசு பணத்தை வீணடிப்பதாகும் என்றார். ஆலங்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
