
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள், சனிக்கிழமையான இன்று கரை திரும்பின. அனைத்து படகுகளிலும் ஓரளவு மீன்கள் அதிகமாக கிடைத்ததால், மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் வரத்து அதிகரித்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு விலை குறைந்து காணப்பட்டது. இதனால் வாவல் மீன் கிலோ ரூ.450, பாறை மீன் ரூ.400, ஊளி மீன் ரூ.350, நண்டு ரூ.750, சீலா மீன் ரூ.850 என விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து , சாலை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரை விற்பனையானது. குறிப்பாக, தோல்பாறை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தோல்பாறை மீன் கிலோ ரூ.220 வரை விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.

