
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி சுடலைமாடசாமி திருக்கோவில் திருவிழாவின் போது கீழே கிடந்த தங்க கம்மலை, வெங்கடாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் திரவியக்கனி – ஜெயந்தி தம்பதியரின் மகள் தீபிகா கண்டெடுத்தார். அந்த கம்மலின் உரிமையாளரை தேடிய போது, அது ராஜசேகரின் மகள் துர்கா என்பவரின் கம்மல் என்பதை தெரிந்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் நேர்மையை அறிந்த வெங்கடாம்பட்டியில் அறக்கட்டளை நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வரும் திருமாறன், தீபிகாவை பாராட்டி ஊக்கப்படுத்தினார். இந்த தகவலை அறிந்த முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், தீபிகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டி, பொன்னாடை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். பொதுவாக, சாலையிலோ அல்லது தெருவிலோ கிடைக்கும் பொருட்களை எடுத்துச் சென்று தங்களிடம் வைத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் நிலையில், தங்க கம்மல் தனக்குச் சொந்தமானது அல்ல என்பதை உணர்ந்து, உரியவரை கண்டறிந்து ஒப்படைத்த சிறுமி தீபிகாவின் நேர்மை மற்றும் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் மகேஷ் மாயவன், ஆ.ரவி, ச.ரவி சுப்பிரமணியன், சங்கர், அன்பழகன், ஹரிகிருஷ்ணன், தங்கத்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறுமியை பாராட்டினர்.



